செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

ஆரணியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2019-10-14 17:34 GMT   |   Update On 2019-10-14 17:34 GMT
ஆரணியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரணி:

ஆரணி-ஆற்காடு சாலையில் ஒரு தனியார் ஜவுளிக்கடை உள்ளது. அதில், ஆரணி காந்திநகர் பகுதியை சேர்ந்த ஆதிகேசவன் மகன் தீனதயாளன் (வயது 27) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை ஆரணியில் திடீரென மழை பெய்தது. தீனதயாளன் ஜவுளிக்கடையில் துப்புரவுப் பணியை மேற்கொண்டு விட்டு, அதில் சேகரித்த குப்பைகளை வெளியே எடுத்துச்சென்று ஓரிடத்தில் கொட்டி விட்டு, மீண்டும் ஜவுளிக்கடையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் ஜவுளிக்கடையின் எதிரே தடுப்புச்சுவர் மீதுள்ள இரும்பு மின்கம்பத்தில் மின்வாரிய ஊழியர்கள் பழுதுநீக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர். தீனதயாளன் அந்த இரும்புக்கம்பம் அருகில் வந்தபோது, அவரின் உடல் மின்கம்பத்தில் உரசியதாகத் தெரிகிறது. அதில் பாய்ந்திருந்த மின்சாரம் அவரை தாக்கியதால் தூக்கி வீசப்பட்டார். அவரை, சக ஊழியர்கள் மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர், தீனதயாளன் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினார். இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News