உள்ளூர் செய்திகள்
புதுவையில் பாரதியாருக்கு பிரம்மாண்ட சிலை நிறுவவேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக மாறவேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் சுற்றுலாத் துறை சார்பில் சுற்றுலா தொழில்முனைவோர் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
புதுச்சேரி சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக மாறவேண்டும். கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்ற வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மேலாண்மை கூட்டம் நடத்தப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் அரசு செயல்பட்டது.
புதுவையைப் பற்றி எனக்கு மிகப்பெரிய கனவு உள்ளது. பல திட்டங்களை தற்போது நிறைவேற்றி உள்ளோம். சுற்றுலாவுக்கு தேவையான இயற்கை வளம் நம்மிடம் உள்ளது. ஆன்மிகம், மருத்துவம், கல்வி என்று சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். திறமைசாலிகளை பிரதமர் கவுரவப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் புதுச்சேரி டெரகோட்டா கலைஞர் முனுசாமிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளார். புதுவையில் டெரகோட்டா பார்க் அமைக்கும் திட்டம் உள்ளது. இதனை உலகம் முழுவதும் உள்ள மக்கள் வந்து பார்ப்பார்கள்.
சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அதேபோல் பாரதியாருக்கு ஒரு பிரமாண்ட சிலையை கடற்கரையில் வைக்கலாம். உலக தமிழர்கள் அதற்கு உதவுவார்கள் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...தி.மு.க. அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி 12ந்தேதி ஆர்ப்பாட்டம்- சீமான் அறிவிப்பு