திருப்பதியில் ரூ.2 கோடியை தாண்டிய உண்டியல் வருவாய்
திருப்பதி:
திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ரூ.300 கட்டணத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2 மாதமாக 7 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே தரிசனத்திற்கு சென்று வந்தனர். உண்டியல் வருமானமும் ரூ.1 கோடிக்கு குறைவாக இருந்தது. கடந்த வாரம் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியை தாண்டியது. நேற்று முன்தினம் 2 மாதத்திற்கு பிறகு உண்டியல் வருமானம் ரூ.2 கோடியை தாண்டியுள்ளது. ரூ.2.6 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது. 15,314 பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று 13,918 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.1.15 கோடி உண்டியல் வசூலானது.
இந்த நிலையில் மலைப்பாதையில் விரைவில் 20 மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த மலைப்பாதையில் மின்சார பஸ்களை இயக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
இதற்கான சோதனை ஓட்டம் திருமலை மலைப்பாதையில் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியிலும் பேட்டரியை சார்ஜ் செய்யும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல் முறையாக மலைப்பாதையில் 20 மின்சார பஸ்களும், பாபவிநாசம் மார்க்கத்தில் 8 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
கொரோனா தொற்று தடுப்பு பகுதி நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டவுடன் மின்சார பஸ்களை திருமலை மலைப்பாதையில் இயக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.