வேலாயுதம்பாளையத்தில் துப்புரவு தொழிலாளி மர்ம மரணம்
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம்,வேலாயுதம்பாளையம் அண்ணா நகர் கீழமேல்வீதி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (55). இவர் புன்செய் புகளூர் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து பணிக்கான கையெழுத்து போட்டு பணிக்கு சென்றார். பின்னர் மீண்டும் அவர் கையெழுத்திட வரவில்லை. இந்நிலையில் சகஊழியர் சக்திவேல், முத்துசாமியை தேடி அவர் வேலை பார்க்கும் மலைவீதிக்கு சென்று பார்த்தார்.
அப்போது முத்துசாமி மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முத்துசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து முத்துசாமியின் மகன் அர்ச்சுணன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.