செய்திகள்
தொட்டியம் அருகே பிளஸ்-2 மாணவர் கொலை வழக்கில் 8 பேர் கைது
தொட்டியத்தில் கொலை செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவன் கொலை வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஒருவரைத் தேடி வருகின்றனர்.
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுைரகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இத்திருவிழாவில் கடந்த 4-ந்தேதி இரவு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது இரு தரப்பினர் இடையே நடந்த மோதல் காரணமாக பிளஸ்-2 மாணவர் குமார்(வயது 18) கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம்(முசிறி), சுரேஷ்குமார்(திருவெறும்பூர்) ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மதுரைகாளியம்மன் கோவில் திருவிழாவில் திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் தொட்டியம் பகுதியை சேர்ந்த கிரண் (20), சந்துரு (20) ஆகிய இருவருக்கும், சித்தூர் பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு காரணமாக நடந்த மோதலில் வாண வேடிக்கை பார்த்துவிட்டு வந்த பிளஸ்-2 மாணவர் குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கிரண், சந்துரு, கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சூர்யா(25), மகேந்திரமங்கலத்தை சேர்ந்த நந்தகுமார் (23), விக்னேஷ் (19), கிருபாநிதி (19), ஏழூர்பட்டியை சேர்ந்த தமிழ் (21), பூபேஷ் (19) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சுகுந்தன் (20) என்பவரை தேடி வருகின்றனர்.