செய்திகள்
போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
தெலுங்கானாவில் சோதனை நடத்தி போலீசார் பறிமுதல் செய்த பணத்தில் 12 லட்சம் ரூபாயை கட்சி தொண்டர்கள் பறித்துச் சென்றது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தின் தப்பக் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ரகுநந்தன் ராவ் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அவருக்கு சொந்தமான 3 இடங்களில் சித்திபேட்டை போலீஸ் கமிஷனர் டேவிஸ் தலைமையிலான போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ரூ.18.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனை பற்றி தகவலறிந்த அக்கட்சி தொண்டர்கள் அப்பகுதியில் ஒன்று கூடினர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இந்நிலையில், போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பணத்தை கட்சி தொண்டர்களில் சிலர் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
சோதனை நடத்திய இடத்தில் கைப்பற்றிய பணத்தில் இருந்து ஒரு தொகையை போலீசாரிடம் இருந்தே கட்சித் தொண்டர்கள் பறித்துச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.