செய்திகள்
ஏலகிரி மலையில் தீ மளமளவென எரிகிறது

ஏலகிரி மலையில் மீண்டும் பற்றி எரிந்த தீ - மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசம்

Published On 2021-04-08 13:59 GMT   |   Update On 2021-04-08 13:59 GMT
ஏலகிரி மலையில் மீண்டும் தீப்பற்றி எரிந்ததால் மூலிகை செடிகள் எரிந்து நாசமாயின.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இது சிறந்த கோடைவாசஸ்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

மேலும் எந்தக் காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை இருப்பதால் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்க செய்கிறது. இதனால் வெளி மாநிலங்களில் மட்டுமல்லாமல் வெளி மாவட்டத்தில் இருந்தும் உள்ளூரில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இங்குள்ள அடர்ந்த காடுகளில் பல்வேறு உயிரினங்கள் வசிக்கின்றன. இந்நிலையில் நேற்று ஏலகிரி மலையில் உள்ள முத்தனூர் அருகே உள்ள கொட்டையூர் பகுதியில் திடீரென அடர்ந்த வனப்பகுதியில் மரங்கள் தீப்பிடித்து எரிய தொடங்கின.

தீ மளமளவென பரவியதில் அங்கிருந்த தைல மரங்கள் எரிந்ததோடு அங்கிருந்த பல்வேறு அரிய வகை மரங்கள் மூலிகைச் செடி கொடிகள் சிறிய அளவிலான தைல மரங்கள் எரிந்து நாசமானது. அத்துடன் முயல், பாம்பு உள்ளிட்டவையும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் சிகரெட் புகைத்து விட்டு வனப்பகுதியில் அணைக்காமல் வீசி விடுகின்றனர்். மேலும் சிலர் ேபாதையில் தீ வைத்து விட்டு தப்பி விடுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சிறிய தீப்பொறி ஏற்பட்டாலும் பெரிய அளவில் தீப்பற்றி எரிந்து நாசம் ஆகும் நிலையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் கூட்டமாக கூடி மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டால் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News