வழிபாடு
துளசி

துளசியை நீங்கள் தானமாக கொடுத்து இருக்கிறீர்களா?

Published On 2022-03-04 07:46 GMT   |   Update On 2022-03-04 07:46 GMT
எப்போது தானம் செய்தாலும், எதை தானம் செய்தாலும், அதனுடன் ஒரு துளசி இலை வைத்தே தானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்னதானம், ரத்த தானம் உள்பட நீங்கள் எத்தனையோ தானங்கள் செய்திருப்பீர்கள். துளசியை நீங்கள் தானமாக கொடுத்து இருக்கிறீர்களா? ஒரு தடவை துளசி இலைகளை தானமாக கொடுத்துப் பாருங்கள். அது தரும் மேன்மைக்கு நிகராக எதுவுமே இல்லை என்பதை உணரலாம். கார்த்திகை மாதம் துளசியை தானம் செய்தால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியமும், பலனும் கிடைக்கும்.

எப்போது தானம் செய்தாலும், எதை தானம் செய்தாலும், அதனுடன் ஒரு துளசி இலை வைத்தே தானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துளசியின் வேரில் தேவர்களும், தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். எனவே துளசியை வீட்டில் வளர்க்கலாம். வீட்டு மாடத்தில் வைத்திருக்கும் துளசி செடியை தெய்வமாக கருதி சுமங்கலி பெண்கள் தினமும் வழிபாடு செய்ய வேண்டும். துளசி செடிக்கு தினமும் காலை, மாலை இரு நேரமும் பூஜை நடத்த வேண்டும்.

பொதுவாக பசுக்கள் நிறைந்த இடம், புனித நதிக்கரைகள் மற்றும் பிருந்தாவனம் ஆகிய இடங்களில் துளசி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வீட்டில் துளசியை வளர்க்கும் போது, அதற்குரிய சுத்தம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசி அவதரித்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கார்த்திகை பவுர் ணமி தினத்தன்று துளசி மாடத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடுகள் செய்தால் நினைத்தது நடக்கும்.

பெண்கள் துளசியை எந்த அளவுக்கு வழிபாடு செய்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களிடம் லட்சுமி கடாட்சம் ஏற்படும். துளசி செடியின் கீழ் தேங்கி இருக்கும் தண்ணீரில் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களும் அடங்கி இருப்பதாக ஐதீகம். அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் தோஷங்கள் விலகி விடும்.
துளசித் தீர்த்தத்துக்கு இருக்கும் சிறப்பை பல தடவை மகாவிஷ்ணு வெளிப்படுத்தியுள்ளார். ‘துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய் தால், ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த அளவுக்கு ஆனந் தம் அடைவேன்’ என்று மகாவிஷ்ணு கூறியுள்ளார்.

அது மட்டுமல்ல, ஒரு தடவை துளசிக்கு மகா விஷ்ணுவே பூஜை செய்தார் என்று ஹரிவம்சத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது. விஷ்ணுவுக்கு உரிய நட்சத்திரம் திருவோணம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். திருவோணம் குளிர்ச்சியான நட்சத்திரமாகும். எனவே தான் அதிக குளிர்ச்சியில் இருக்கும் மகாவிஷ்ணுவுக்கு வெப்பத்தைத் தரும் துளசியை பூஜைக்குரிய பொருளாக வைத்துள்ளனர்.

துளசியை எடுக்கும் போது பயப்பக்தியுடன் பறிக்க வேண்டும். அதிகாலையில் நீராடி சந்தியா வந்தனம் செய்து, எல்லாவித அனுஷ்டானங் களையும் முடித்த பிறகே துளசி இலையை பறிக்க வேண்டும். துளசியை பறிக்கும்போது, அதற்குரிய ஸ்லோகத்தை சொல்லியபடி பறிப்பது மிகவும் நல்லது. வீட்டில் துளசி வளர்ப்பதால் சுத்தமான காற்றை நாம் பெற முடியும். புகை மற்றும் மாசுவை தூய்மைப் படுத்தும் ஆற்றல் துளசிக்கு உண்டு.

அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் துளசி உயர்வானது. புனிதமானது. ஈடு இணையற்றது. இத்தகைய சிறப்புடைய துளசியை வைணவத் தலங்களுக்கு செல்லும் போது மறக்காமல் வாங்கிச் செல்ல வேண்டும். துளசி சார்த்தி நீங்கள் வழிபடும் போது பெருமாளின் அருளை மிக எளிதாகப் பெற முடியும்.

அது மட்டுமின்றி மகா விஷ்ணுவின் வைகுண்டத்துக்கு சென்று மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ வழி ஏற்படும். துளசி வழிபாடு செய்யும் இளம் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். செல்வம் சேரும்.
Tags:    

Similar News