ஆன்மிகம்
நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது

Published On 2020-11-04 03:59 GMT   |   Update On 2020-11-04 03:59 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளினார்.

பின்னர் ஊஞ்சல் மண்டபத்திற்கு 5.30 மணிக்கு வந்தடைந்தார். இதைத்தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆராத்தி கண்டருளுளினார். அப்போது நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதேபோல் இன்று (புதன்கிழமை) 2-ம் திருநாள் முதல் 6-ம் திருநாள் மற்றும் 8-ம் திருநாள் வரை தினமும் இரவு 7.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை நம்பெருமாள் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர், மாலை 6.15 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார்.

ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8 மணிமுதல் இரவு 9 மணிவரை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 9-ம் நாள் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுவதுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News