செய்திகள்
அய்யம்பேட்டையில் விஷம் தின்று இளம்பெண் தற்கொலை
அய்யம்பேட்டையில் செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததை தாய் கண்டித்ததால் இளம்பெண் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை நேரு நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பானுமதி. இவருடைய மகள் துர்க்காதேவி. இவர் கல்லூரியில் பட்ட படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் துர்க்காதேவி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.
இதனை அவரது தாயார் பானுமதி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த துர்க்காதேவி வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்றார். மேலும் கொசு விரட்டியாக பயன்படுத்தக்கூடிய திரவத்தையும் குடித்துவிட்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு துர்க்காதேவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் அய்யம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.