வாணியம்பாடி அருகே தமிழக -ஆந்திர எல்லை வனப்பகுதியில் மெக்கானிக் அடித்து கொலை
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது24). சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
கடையில் கனவாய்புதூர் பகுதியை சேர்ந்த திருமலை (25) என்பவரும் வேலை செய்து வருகிறார். நண்பர்களான யுவராஜூம், திருமலையும் கடந்த 22-ந்தேதி வாணியம்பாடி அருகே உள்ள தமிழக- ஆந்திர எல்லை பகுதியில் உள்ள பாலாறு புல்லூர் தடுப்பணைக்கு பைக்கில் சென்றனர்.
அன்று இரவு திருமலை மட்டும் வீட்டிற்கு வந்தார். ஆனால் யுவராஜ் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த யுவராஜின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். யுவராஜ் நண்பரான திருமலையிடம் குடும்பத்தினர் விசாரித்தனர்.
எந்த தகவலும் கிடைக்காததால் யுவராஜின் தந்தை கோபால் ஆந்திர மாநிலம் குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் புல்லூர் தடுப்பணை அருகே உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் பிணம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்ததில் இறந்து கிடந்தது யுவராஜ் என்பது தெரியவந்தது.
அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளது. அவரை யாரோ அடித்துக்கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசிச் சென்றுள்ளனர்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.