ஆன்மிகம்
ராகுகால பூஜை

செவ்வாய் கிழமை ராகுகால விரத பூஜை ஏன் சிறந்தது தெரியுமா?

Published On 2021-01-05 08:01 GMT   |   Update On 2021-01-05 08:01 GMT
துர்க்கையைத் துதிக்க ராகுகாலமே சிறந்தது. ராகுகாலத்தில் பூஜை செய்வோமானால், அந்த பூஜை மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையைவிட பலன் மிகுந்ததாக இருக்கும்.
மகிஷாசுரனை வதம் செய்ய ஈசன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து அதில் இருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறிகளின் மூலம் வாமை, ஜயேஷ்டை, ரவுத்ரி, சர்வபூதமணி, மனோன்மணி என்னும் நவசக்திகளைக் கொண்ட நவதுர்க்கைகளைத் தோற்றுவித்தார்.

இந்த நவசக்திகளும் ஒன்றாகி துர்க்கா பரமேஸ்வரியாக வடிவெடுத்து சிம்ம வாகனத்தில் புறப்பாடு எருமை வடிவில் இருந்த மகிஷனை வதைத்தார். அதன் காரணமாக ‘மகிஷாசுர மர்த்தினி’ என்னும் திருநாமத்தைக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.

எருமை வாகனத்தில் சங்கு, சக்கரம், கதை, கத்தி, கலப்பை, உலக்கை, கேடயம், தோமரம், கோடாளி, கயிறு, குந்தாயுதம், திரிசூலம், ஒப்புறயர்வற்ற சாரங்கம் என்னும் வில்லுடன் துர்க்காதேவி காட்சியளிக்கிறாள். 

துர்க்கையைத் துதிக்க ராகுகாலமே சிறந்தது. ராகுகாலத்தில் பூஜை செய்வோமானால், அந்த பூஜை மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையைவிட பலன் மிகுந்ததாக இருக்கும். அதற்கு ஒரு காரணம் உள்ளது. செவ்வாய்க்கிழமைக்குரிய அங்காரகன் துர்க்கையை மங்கள சண்டிகையாக வழிபட்டு முழுபலனையும் அடைந்தவன். 

செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து செய்யும் ராகுகால துர்க்கா பூஜைக்கு பலன்கள் அதிகம். திருமணத்தடை நீங்குதல், செவ்வாய் தோஷம் அகலுதல், பீடைகள் விலகுதல், காரிய சித்தி, பகை விலகுதல் போன்ற நன்மைகள் ஏற்படும்.

செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் நிறப் பூக்களான தங்க அரளி, சாமந்தி, நந்தியாவட்டை ஆகிய மலர்களை அர்ச்சனைக்கும், மஞ்சள் நிற வாழைப் பழம், பலாச்சுளை, மாம்பழம், மஞ்சள் வண்ண வெண் பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்திற்கும் பயன்படுத்தி ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரியைப் பூஜிக்க வேண்டும். எலுமிச்சம் பழங்களைக் கோர்த்த மாலை இந்த அம்மனுக்கு விசேஷம். 

செவ்வாய்க்கிழமையன்று 5 எலுமிச்சம் பழங்களை (நல்ல மஞ்சள் நிறம் உடையவை) எடுத்து இரண்டாக வெட்டிச் சாற்றைச் சிறுபாத்திரத்தில் வடித்து வைத்து விட்டு, இரு எலுமிச்சைத் தோல்களை எதிர்ப்புறமாக மடக்கிக் கிண்ணம் போல் அமைத்து, அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றித் திரியிட்டு அம்மன் சன்னதியில் வைக்க வேண்டும். இவ்வாறு 5 எலுமிச்சை மூடிகளில் மொத்தம் 10 விளக்குகள் செய்யலாம்.
ஆனால் ஒரு மூடியைத் தனியே வைத்துவிட்டு, 9 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும். இந்த 9 விளக்குகளைத் துர்க்கை அம்மன் சன்னதியில் வைக்க வேண்டும். ஆயுள் பலம் பெருக நல்லெண்ணெய்க்குப் பதில் இலுப்பை எண்ணெயை உபயோகிக்கலாம்.

ராகு காலத்தில் துர்க்கை சன்னதியில் முதிய சுமங்கலிப் பெண்ணுக்கு (சுவாசினி) தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, பூ மற்றும் காணிக்கை கொடுத்து வணங்கினால், அவற்றை நேரடியாக சுவாசினி உருவில் துர்க்கா பரமேஸ்வரியே பெற்றுக்கொண்டு அருள் பாலிப்பாள் என்பது ஐதீகம். மேலும் துர்க்கை சன்னதியில் கன்னிப் பெண்களின் கால்களுக்கு நலுங்கிட்டு, கைகளில் வளையல் இட்டுப் பூச்சூட்டி பூஜித்தால் வாழ்க்கையில் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்.

செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜையைச் சுமங்கலிப் பெண்கள் கடைப்பிடித்து வர கணவனுக்கு ஆயுள் பெருகும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். செவ்வாய்க்கிழமை ஆண்கள் விரதம் இருந்து துர்க்கையை வழிபட்டால் கடன், நோய், தொழில் இடையூறுகள் போன்ற தொல்லைகளில் இருந்து பரிபூரணமாக விடுபடலாம்.
Tags:    

Similar News