செய்திகள்
பாதுகாப்பு படை அதிரடி தாக்குதல்

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- பாதுகாப்பு படை அதிரடி தாக்குதல்

Published On 2021-07-16 08:14 GMT   |   Update On 2021-07-16 08:14 GMT
இந்த ஆண்டு இதுவரை 78 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 39 பயங்கரவாதிகள் லஷ்கர்- இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தினமும் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள் ஆங்காங்கே மறைவிடங்களில் பதுங்கி இருக்கிறார்கள். அவர்களை தேடிப்பிடித்து பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்களை நடத்துகின்றனர்.

இதன் காரணமாக ஏராளமான பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் தலைநகர் ஸ்ரீநகரில் டன்மார் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து.

அதையடுத்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், காஷ்மீர் மாநில போலீஸ் படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அல்மதா என்ற பயங்கரவாதி ஒரு வீட்டுக்குள் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

உடனே பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் எதிர்தாக்குதல் நடத்தினார்கள். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று கருதி, தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஊடுருவல் செய்து வருகிறது.

இந்த ஆண்டு இதுவரை 78 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 39 பயங்கரவாதிகள் லஷ்கர்- இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றவர்கள் அல்-பாதர், ஜெய்ஷ்-இ- முகமது போன்ற பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள்.

Tags:    

Similar News