செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 22-ந் தேதி புதுக்கோட்டை வருகை
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந் தேதி வருகை தருகிறார். கொரோனா தடுப்பு பணிகளை அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் முதல்-அமைச்சர் வருவதாக தகவல் வெளியானது. ஆனால், பல்வேறு காரணங்களால் அவரது வருகை தள்ளிப்போனது. இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் கடந்த 12-ந் தேதி நள்ளிரவு அவரது தாயார் இறந்ததால் தூத்துக்குடி நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்வதற்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகிற 22-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தருகிறார். அன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், அரசின் புதிய திட்டங்களையும், முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.
விவசாயிகளுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மக்களின் 100 ஆண்டுகால கனவு திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தொடர்பான பணிகளையும் முதல்-அமைச்சர் பார்வையிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆறுமுகம் எம்.எல்.ஏ., கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் ஒவ்வொரு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒவ்வொரு துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மாவட்டத்தின் பெரிய குளமான அந்த பகுதி காவிரி-வைகை-குண்டாறு இணைப்பின் மூலம் பயன்பெறும் என்பதால் அதனை முதல்-அமைச்சர் பார்வையிட உள்ளார்.