செய்திகள்
ஐநா பாதுகாப்பு கவுன்சில்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா

Published On 2021-08-01 10:28 GMT   |   Update On 2021-08-01 10:41 GMT
ஜூலை மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கி சிறப்பாக வழிநடத்தியதற்காகவும் இந்தியாவிற்கு ஆதரவு அளித்ததற்காகவும் பிரான்சுக்கு திருமூர்த்தி நன்றி தெரிவித்தார்.
புதுடெல்லி:

ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்காக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 15 உறுப்பினர் கொண்ட கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளை தவிர்த்து இந்தியா உள்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன.

இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். அந்த வகையில் இந்தியா இந்த மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.

இந்தியா தனது முதல் பணி நாளான திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2), இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, செய்தியாளர்களை சந்தித்து பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாத திட்டம் குறித்து விளக்குவார்.



ஜூலை மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கி சிறப்பாக வழிநடத்தியதற்காகவும், இந்தியாவிற்கு ஆதரவு அளித்ததற்காகவும் பிரான்சுக்கு திருமூர்த்தி நன்றி தெரிவித்தார்.

அமைதிப்படை வீரர்களின் நினைவாக இந்தியா ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யும். சிரியா, ஈராக், சோமாலியா, ஏமன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்களை திட்டமிட்டுள்ளது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் திருமூர்த்தி கூறினார்.

Tags:    

Similar News