செய்திகள்

கொல்கத்தாவில் வெடிகுண்டு புரளியால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு

Published On 2018-11-04 20:01 GMT   |   Update On 2018-11-04 20:01 GMT
கொல்கத்தாவில் ரெயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய புரளியால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் சுமார் 1 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Kolkata #Bomb
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் சீல்டா என்கிற பகுதியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை சீல்டா மற்றும் பூங்கா சர்க்கஸ் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கிடப்பதை ரெயில்வே ஊழியர் கண்டார்.

உடனே இது குறித்து அவர் மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையில் தண்டவாளத்தில் கிடப்பது வெடிகுண்டு என வேகமாக தகவல்கள் பரவின. இதனால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சுமார் 1 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்டவாளத்தில் கிடந்த பொருளை ஆய்வு செய்தபோது அது வெடிகுண்டு அல்ல என்பதும், யாரோ வேண்டுமென்றே புரளி கிளப்பியதும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் தண்டவாளத்தில் கிடந்த பொருளை அப்புறப்படுத்தியதும், ரெயில் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News