தொழில்நுட்பம்
கூகுள்

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து சீனாவுக்கு எதிரான இந்திய செயலிகள் நீக்கம்

Published On 2020-06-04 06:36 GMT   |   Update On 2020-06-04 06:36 GMT
கூகுள் பிளே ஸ்டோரில் அதிக வரவேற்பு பெற்று வந்த இந்திய செயலி அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறது.



சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், அந்த நாட்டுக்கு எதிரான மனநிலை இந்திய மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இது போதாது என இந்திய சீன எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வாலாட்டி வருகிறது. இது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல இந்தியர்களுக்கு சீனா மீது மேலும் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியது.

இந்த தருணத்தில் சீன தயாரிப்புகளை தவிர்க்குமாறு இந்திய கல்வியாளர் சோனம் வாங்சுக் இந்தியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது இந்தியர்கள் பலரும் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு ஒரு ஆப்பு போல அமைந்தது.



இதற்கு வசதியாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த ‘ஒன்டச் ஆப் லேப்ஸ்’ நிறுவனம் ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ என்ற செயலியை உருவாக்கியது. இது கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பிடித்து, இது இந்திய செல்போன் உபயோகிப்பாளர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது. கடந்த மே மாதம் முதல் இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதை பதிவிறக்கம் செய்தனர்.

இந்த செயலி, சீனாவின் செயலிகளை அடையாளம் கண்டு, அவற்றை நீக்குவதற்கு உதவி வந்தது. இதே போன்று சீனாவின் டிக்டாக் செயலிக்கு மாற்றாக இந்தியாவில் மித்ரன் என்ற செயலி அறிமுகமானது. இந்த செயலியையும் இந்திய செல்போன் உபயோகிப்பாளர்கள் 50 லட்சம் பேர் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கினர். இது சீன வர்த்தகத்துக்கும், அந்த நாட்டின் செயலிகளுக்கும் பலத்த அடியாக அமைந்தது.

இந்த நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ரிமூவ் சீனா செயலியும், மித்ரன் செயலியும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. கூகுள் நிறுவனத்தின் கொள்கையை இந்த செயலிகள் மீறியதால் இவை திடீரென நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News