செய்திகள்
நேதாஜி பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் மம்தா பானர்ஜி

நேதாஜி பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ’ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் - பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசமறுத்த மம்தா

Published On 2021-01-23 12:45 GMT   |   Update On 2021-01-23 12:45 GMT
நேதாஜியின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மேற்குவங்காளத்தில் நடந்துவரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கொல்கத்தா:

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, நேதாஜியின் சொந்த மாநிலமான மேற்குவங்காளத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அரசு விழாவாக நடைபெற்று வருகிறது.

அம்மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மஹாலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி, மேற்குவங்காள கவர்னர் ஜெக்தீப் தன்கார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முதல்மந்திரி மம்தா பானர்ஜி பேசுவதற்காக மேடையில் அமைக்கப்பட்டிருந்த ’மைக்’ அருகே சென்றார். அப்போது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூடியிருந்தவர்களில் சிலர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என தொடர்ச்சியாக கோஷங்களை எழுப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த மேற்குவங்காள முதல்மந்திரி, ‘ இது அரசு விழாவே தவிர அரசியல் நிகழ்ச்சியல்ல. அரசு விழாவுக்கென்று தனி மரியாதை இருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்துவிட்டு யாரையும் அவமரியாதை செய்யக்கூடாது. எனது போராட்டத்தின் வெளிப்பாடாக இந்த நிகழ்ச்சியில் நான் பேசப்போவதில்லை. ஜெய்ஹிந்த், ஜெய் வங்காளம்’

என்றார்.

இந்த சம்பவத்தால் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   
Tags:    

Similar News