செய்திகள்
விவசாயிகள் போராட்டம்

முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்? மத்திய அரசுடனான 8-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது

Published On 2021-01-08 09:40 GMT   |   Update On 2021-01-08 09:40 GMT
விவசாய சங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இன்று 8-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் இன்று 44-வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் இடையே 7 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

ஏற்கனவே நடந்த அனைத்துகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளன. விவசாய சட்டங்களை திரும்பபெற வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு பிடிவாதமாக தெரிவித்துள்ளது. மாறாக சட்டத்தில் உள பிரிவு வாரியாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளது.

ஆனால், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பதில் விவசாய சங்கங்கள் பிடிவாதமாக உள்ளது. மேலும், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி ராஜபாதையில் டிராக்டர் அணிவகுப்பு நடத்துவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இந்நிலையில், விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையே 8-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்று வருகிறது. 

டெல்லியில் விக்யான் பவன் அரங்கில் நடைபெற்றும் இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில் வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் மற்றும் மத்திய மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். விவசாய சங்கங்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

இரு தரப்பும் தங்கள் முடிவில் பிடிவாதமாக உள்ளதால் இன்றைய பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
Tags:    

Similar News