செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 14 அறிவிப்புகளை வரவேற்கிறேன்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2021-09-11 10:18 GMT   |   Update On 2021-09-11 10:18 GMT
மகாகவி நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ந்தேதி ‘மகாகவி’ நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வரவேற்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தந்தை பெரியாரின் பிறந்தநாள் ‘சமூகநீதி’ நாளாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு அறிவித்த போது அதனை நான் வரவேற்றதோடு, இந்திய விடுதலைக்கு முன், மொழிப்பற்றினையும், நாட்டுப்பற்றினையும் ஒருமைப்பாட்டினையும், காவேரி போல் பெருக்கெடுத்து ஓடும் தன் பாட்டுத்திறத்தால் கவிதை நயத்தால் உணர்த்தி, உறங்கி கிடக்கும் மக்களை தட்டி எழுப்பி விடுதலை உணர்வினை ஊட்டிய மகாகவி பாரதியாரோடு ஒப்பிட்டு தமிழ்நாட்டில் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் என்று கூறி இருந்தேன்.

இந்த நிலையில் மகாகவி நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ந்தேதி ‘மகாகவி’ நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருப்பது அனைவரும் வரவேற்கக்கூடிய ஒன்று.

தமிழ் மொழியின் சிறப்பினை உலகுக்கு உணர்த்திய கவிஞர் மகாகவி பாரதியார். மொழிப்பற்று உடையவனே நாட்டுப்பற்று உடையவனாய் வாழ இயலும் என்பதை மெய்பித்துக்காட்டியவர் கவிஞர் மகாகவி பாரதியார். விடுதலை பாடல்களால் தமிழகத்தை வீறுபெறச் செய்தவர் மகாகவி பாரதியார்.

பாரதி ஒரு பன்மொழிப் புலவர். ஆங்கிலம் பிரெஞ்சு, தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த பாரதி ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்’ என பாடினார் என்றால் அந்த அளவுக்கு உயர்ந்த மொழி தமிழ் மொழி என்பது தான் அதன் உள்ளார்ந்த பொருள்.

தமிழ் மொழியின் சிறப்பையும், உயர்வையும் கூறி இளைஞர்களின் உள்ளங்களில் இன்றளவிலும் சிம்மாசனமிட்டு இருப்பவர் பாரதியார். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சில காலம் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பாரதி பல செய்தி இதழ்களையும் நடத்திய பெருமைக்குரியவர்.

‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ என தாய்நாட்டின் உயர்வை வியந்து பாடிய பாரதி நாட்டுப்பற்றினை போற்றும் வகையில், ‘வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு’ என்று பாரத நாட்டையும் போற்றி மகிழ்ந்தார்.

‘முப்பது கோடி முகமுடையாள்-உயிர் மொய்ம் புற ஒன்றுடையாள்-இவள் செப்புமொழி பதினெட்டுடையாள்-எனிற் சிந்தனை ஒன்றுடையாள்’ என பாடி இந்தியர்களின் ஒற்றுமை உணர்வை படம்பிடித்து காட்டியவர் மகாகவி பாரதியார்.

‘ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்’ என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்ணுரிமையை நிலைநாட்டும் வகையிலும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவித்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், மகளிர் இருசக்கர வாகன திட்டம் என பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தியதோடு சென்னை திருவல்லிக்கேணியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை புதுப்பித்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தவர் புரட்சித்தலைவி அம்மா.

‘ஏழை என்றும், அடிமை என்றும், எவனும் இல்லை சாதியில்’ என்று பாடிய புரட்சி குயில் பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள் மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்ததோடு பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகத்தை மாணவ- மாணவியருக்கு வழங்குதல், பாரதியின் உருவச்சிலைகள், உருவம் பொறித்த கலை பொருட்களை பூம்புகார் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்தல், பாரதி குறித்த நிகழ்வுகளை ‘பாரெங்கும் பாரதி’ என்ற தலைப்பில் நடத்துதல், ‘திரையில் பாரதி’ என்ற நிகழ்வினை நடத்துதல், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியின் பெயரில் இருக்கை அமைத்தல், உத்தரபிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசு சார்பில் நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட 14 அறிவிப்புகளை முதல்- அமைச்சர் அறிவித்து இருக்கிறார்.

இந்த அறிவிப்புகளை அ.தி.மு.க. சார்பில் வரவேற்பதோடு இந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News