உள்ளூர் செய்திகள்
வழிப்பறி

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பு

Published On 2022-01-12 10:34 GMT   |   Update On 2022-01-12 10:34 GMT
கண்காணிப்பு பணிக்கு போதிய போலீசார் இல்லாததால் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் இரவு நேரத்தில் வரும் பயணிகள் அச்சமடைகின்றனர்.
மதுரை 

மதுரை மாட்டுத்தாவணி  ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தினசரி ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. எனவே 24 மணிநேரமும் பயணிகள் கூட்டம் காணப்படும். இந்த பஸ் நிலையத்திற்கு இரவு நேர பயணம் செய்ய வருவோர் பயணிகள் அதிகம். 

குறிப்பாக ராமேசுவரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருப்பதி, சென்னை செல்ல இரவு நேரத்திலேயே அதிக பயணிகள் குடும்பத்துடன் வருகின்றனர்.  ஆனால் இந்த பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வசதி இல்லை. குறிப்பாக பஸ் நிலையத்திற்கு தனியாக வரும் பெண்களுக்கு ஈவ்டீசிங், பாலியல் தொல்லை, கேலி, கிண்டல், மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 

மேலும் பயணிகளிடம் கிடைத்ததை திருடிச்செல்வது, பிக்பாக்கெட், பணத்தை பிடுங்கி செல்லுதல் போன்ற சம்பவங்களும் அதிகளவில் நடந்து வருகிறது. குடிபோதையில் வரும் நபர்கள் அரசு பஸ் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வதும், மிரட்டுவது போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. 

ஆனால் குற்றவாளிகளை தடுப்பதற்காக பயணிகள் பாதுகாப்புக்காக, பயணிகளுக்கு உதவுவதற்காக இங்கு அமைக்கப்பட்ட காவல் நிலையத்தில் போதுமான போலீசார், தலைமை காவலர்கள், பெண் போலீசார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவில்லை. 

தற்போது நியமிக்கப்பட்டுள்ள போலீசாரும் நீதிமன்ற பணி, வி.ஐ.பி. பாதுகாப்பு பணி நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு சென்று விடுவதாக புகார் எழுந்துள்ளது. பஸ் நிலையத்தில் தொலைத்து விட்டு புகார் அளிக்க வருபவர்களின் புகார் மனுக்களை பெறவும், அது குறித்து விசாரிக்கவும்  போதுமான காவலர்களை நியமிக்க வேண்டும். 

பஸ் நிலையத்தில் உள்ள 8 பிளாட்பாரங்களில் தலா 2 பிளாட்பாரங்களுக்கு ஒரு போலீசார் நியமிப்பதன் மூலமே திருட்டு, கொலைமிரட்டல், தகராறு சம்பவங்களை தடுக்கமுடியும். மேலும் பஸ் நிலையத்தில் அவ்வப்போது ரோந்து சுற்றி பாதுகாப்பு பணி மேற்கொள்ளவும், போதுமான போலீசாரை நியமிக்க வேண்டும். 

எனவே மாநகர போலீஸ் கமிஷனர் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஆய்வு செய்து போதுமான போலீசாரை நியமிக்க வேண்டும் என பயணிகள் போக்குவரத்து கழக ஊழியர்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News