செய்திகள்
3 மாதத்தில் வெளிமாநிலத்தினர் 75,586 பேருக்கு கொரோனா பரிசோதனை-கேரளாவில் இருந்து திருப்பூர் வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு
மாவட்டத்தில் மொத்தம் 88 ஆயிரத்து 607 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது அரசு, தனியார் மருத்துவமனையில் 767 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 90 ஆயிரத்து 305 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். நேற்று 87 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதையடுத்து மாவட்டத்தில் மொத்தம் 88 ஆயிரத்து 607 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது அரசு, தனியார் மருத்துவமனையில் 767 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று உயிரிழந்தனர். மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகர் நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவ் கிருஷ்ணகுமார் கூறுகையில்,
கடந்த 3 மாதத்தில் வெளிமாநிலத்தினர் 75,586 பேர் திருப்பூர் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கேரளாவில் இருந்து ரெயில் மூலம் திருப்பூர் வரும் பயணிகளை பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கிறோம். தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தி கொள்வதுடன் டாக்டரை சந்தித்து ஆலோசனை சிகிச்சை பெறுவது அவசியம் என்றார்.