லைஃப்ஸ்டைல்
கண்டாங்கி சேலைகள்

இளம் பெண்களை கவர்ந்த கண்டாங்கி சேலைகள்

Published On 2019-10-29 06:35 GMT   |   Update On 2019-10-29 06:35 GMT
காஞ்சீபுரம் பட்டுச் சேலைகளை போலவே தமிழகத்தில் சிறப்புமிக்க காட்டன் சேலைகள் ஏராளமாக தயாராகிறது. அதில் காரைக்குடி காட்டன் கண்டாங்கி சேலைகளுக்கு பல தனித்துவங்கள் உண்டு.
தமிழக பெண்களின் பாரம் பரிய ஆடையான சேலைகள் மிகவும் பிரசித்திப் பெற்றது. குறிப்பாக காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளுக்கு உலகம் முழுவதும் ரசிகைகள் உண்டு என்றால் அது மிகையல்ல.

காஞ்சீபுரம் பட்டுச் சேலைகளை போலவே தமிழகத்தில் சிறப்புமிக்க காட்டன் சேலைகள் ஏராளமாக தயாராகிறது. அதில் காரைக்குடி காட்டன் கண்டாங்கி சேலைகளுக்கு பல தனித்துவங்கள் உண்டு.

உறுத்தலற்ற எளிய நிறங்கள், பாரம்பரிய டிசைன்கள், உடம்பை வதைக்காத தரம், வெயிலுக்கும், குளிருக்கும் தகுந்த இதம், கசங்காக தன்மை என பல்வேறு தனித்தன்மைகளை கொண்ட கண்டாங்கி சேலைகள் சுமார் 250 ஆண்டுகள் பழமையானவை.

முதலில் செட்டிநாட்டை சேர்ந்தவர்களின் எண்ணத்தில் உதித்த வடிவத்தில் உரு வாக்கப்பட்டது. காரைக்குடியை சுற்றியுள்ள கிராமங் களில் இன்றளவும் கண்டாங்கி சேலை நெசவு உற்சா கமாக நடந்து வருகிறது.

இச்சேலைகளின் முக்கிய சிறப்பே, நெசவு செய்யும் அத்தனை பேரும் பெண்கள் என்பது தான். உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் செட்டிநாட்டு ஆச்சிமார்கள் இந்த சேலைகளைத் தான் விரும்பி உடுத்துவார்கள். முன்பு பெரியவர்கள் மட்டும் உடுத்தி வந்த இச்சேலைகளை தற்போது சினிமா நடிகைகளும், கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என பலரும் விரும்பி அணிகிறார்கள்.

கண்டாங்கி சேலைகளின் ஸ்பெஷலே பார்டர் தான். டைமண்ட், கொடி, இலை, ருத்ராட்சம், கோபுரம், அன்னப்பட்சி, தாமரைப்பூ, யானை, மயில் என பல உரு வங்களில் டிசைன்களாக வைத்து கண்டாங்கி சேலைகள் தயாரிக்கப்படுகின்றன.

பெண்களின் கெண்டைக் கால் பகுதியில் இந்த சேலையின் பார்டர் பளிச்சிடுவதால் தான் கண்டாங்கிச்சேலை என பெயர் வந்தததாக சொல்கிறார்கள். ரூ.500-ல் இருந்து கிடைக்கும் இந்த சேலைகள் இரண்டு பார்டர்கள் கொண்டவை. நடுவில் கட்டம் போட்டதாகவும், அமைந்துள்ளது. காரைக்குடியை மையமாகக் கொண்டு சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதிகளுக்கு இந்த சேலைகள் அதிகமாக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நகரத்தார் சமூகம் அதிகமாக பயன்படுத்தி வந்த சேலை தற்போது வெளிநாடுகள் வரை பிரபலம் அடைந்துள்ளது. வேறு எந்த சேலைகளிலும் இல்லாத வகையில் 48 இஞ்ச் அகலம் கொண்ட கண்டாங்கி சேலைகள் 5.5 மீட்டர் நீளம் கொண்டவை.

காரைக்குடி மட்டுமல்லாது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலும் இந்த சேலைகள் தயார் செய்யப்படுகிறது. மூன்று தலைமுறையினர் சுமார் 80 ஆண்டுகளுகளுக்கும் மேலாக இதனை தயாரித்து வருகிறார்கள்.



இந்த சேலைகளுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்தது கூடுதல் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. புவிசார் குறியீடு கொடுப்பதால் மற்ற யாரும் அந்த பெயரை பயன்படுத்தி அந்தப் பொருளை விற்க முடியாது. உற்பத்தி செய்பவர்களுக்கு பொருளாதாரப் பாதுகாப்பு கிடைக்கிறது.

கண்டாங்கி சேலைகளுக்க புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் இதனை கைத்தறி சேலை என்று கூறி பவர்லூம் சேலையை விற்பனை செய்ய முடியாது என்பதால் உண்மையான கைத்தறி நெசவாளர்களின் நிலை மேம்படும் சூழல் ஏற்பட்டிருப்பது நெசவாளர் களுக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

பொதுவாக அதிக கெமிக்கல் கொண்டு செய்யப்படும் சேலைகளுக்கு சில மணி நேரத்தில் நிறத்தை ஏற்றி விடலாம். ஆனால் கண்டாங்கி சேலையில் நிறம் ஏற்ற ஒரு வாரம் கூட ஆகும். ஆனால் கண்டாங்கி சேலைகள் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாது. கண்டாங்கி சேலைக்கு முக்கிய மூலப்பொருளாக காரைக்குடி பகுதி தண்ணீரை கூறுகிறார்கள் அப்பகுதி நெசவாளர்கள்.

ஆரம்பத்தில் 1939&ம் ஆண்டுகளில் காரைக்குடி கண்டாங்கி சேலைகளை தயாரிக்க சுத்தமான 40 எண் ரக பருத்தி நூல்களைக் கொண்டே தயாரித்திருக்கிறார்கள். கட்டினால் கம்பீரமான தோற்றப்பொலிவு தரும் இவ்வகை சேலைகளை ரசாயன கலப்பன்றி உற்பத்தி செய்ய நாளடைவில் 60 எண் ரகத்தினைத் தாண்டி, 80 எண் ரக வகையான தூய பருத்தி நூல்களைக் கொண்டு தயாரிக்க இச்சேலைகள் இன்றைய இளைய தலைமுறை பெண்களுக்கும் பிடித்துப் போய் விட்டது.
முதலில் தங் களுக்கு தேவையான நூல்களை கொள்முதல் செய்து அதன்பின் சாதம் வடித்த தண்ணீரில் ஊற வைத்து நிறமிட்டு புணைந்து நெய்ய அனுப்புவார்கள்.

நூல் கொடுக்க, பிசிறுகளை சுத்தம் செய்ய, கட்டை மாட்டிவிட என குறைந்தது 3 நபர்கள் இருந்தால் தான் ஒரு புடவையை நெய்ய முடியும் என்கின்றனர் உற்பத்தி யாளர்கள். எக் காலத்திலும் நிறம் மங்காததும், அணிவதற்கு எளிதானதுமாக விளங்கும் இச்சேலைகள் அணிந்தவர்களுக்கு சிறப்பு தோற்றத்தை தருகிறது என பெண்கள் கூறுகிறார்கள்.

தூய பருத்தி என்பதால் எளிதில் வியர்வை ஊறிஞ்சி சருமத்தினை பாதுகாக்கும் என்பது தான் இதனுடைய வெற்றிக்கான மூலமந்திரம்.

ரசாயன கலப்பில்லாதவை

கண்டாங்கி சேலைகள் உற்பத்தி தொடங்கிய நாட்களில் செட்டிநாட்டில் உள்ள ஆச்சிமார்கள் விரும்பி அணிய செட்டிநாட்டு பருத்தி சேலை என்றே அழைக்கப்பட்டது. பின்னர் நகரத்தாரின் சொல்வண்ணத்தால் இது கண்டாங்கி சேலையானது. எனினும் 1980&களில் மீண்டும் செட்டிநாட்டு பருத்திச்சேலை என்றே அழைக்கப்பட்டது என்கின்றனர் உற்பத்தியாளர்கள். சேலையின் நடுவில் புட்டா டிசைன், கம்பி டிசைன், கோபுர டிசைன் மற்றும் மாங்காய் டிசைன் என போட்டு பெண்களை கவர்ந்த சிலை அதே தரத்துடன் போல்ட் மற்றும் ஸ்டிரைப்ஸ் என கூகுள், பேஷன் டெக்னாலஜியின் உதவியுடன் மாறினாலும், இரண்டு பக்க பார்டர் மாறாததால் மறுபடியும் கண்டாங்கி என்றே மாறி உள்ளது.

இந்திய சேலைகள் தயாரிப்பால் அதிகம் ரசாயனம் கலக்கப்படுவதால் இதனை வெளிநாட்டவர்கள் அதிகமாக இறக்குமதி செய்ய தயங்குகின்றனர். இதை கருத்தில் கொண்டு கண்டாங்கி சேலைகள் ரசாயன கலப்பின்றி இயற்கை வண்ணம் மற்றும் பசை பொருட்களை பயன்படுத்தி நெய்கின்றனர்.
நயன்தாரா முதல் நாட்டு நடும் கிராமத்து மூதாட்டி வரை கண்டாங்கி சேலை கட்டினால் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பச்சை, நீலம், மாம்பழம் மஞ்சள், பிரவுண், சிவப்பு போன்ற அடர்த்தியான வண்ணங்களில் அகலமான சரிகை பார்டர் வைத்த இந்த சேலைகள் எல்லா காலத்துக்கும் ஏற்றவை.
Tags:    

Similar News