ஆன்மிகம்
கலசபாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றபோது எடுத்த படம்.

செய்யாற்றில் ரதசப்தமி தீர்த்தவாரி: அருணாசலேஸ்வரர், திருமாமுடீஸ்வரர் எழுந்தருளினர்

Published On 2021-02-19 03:34 GMT   |   Update On 2021-02-19 03:34 GMT
ரதசப்தமியையொட்டி கலசபாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி நடந்தது. இதில் அருணாசலேஸ்வரர், கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் சாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கலசபாக்கம் செய்யாற்றில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் அமாவாசை முடிந்து 7-வது நாள் ரதசப்தமியை முன்னிட்டு தீர்த்தவாரி மற்றும் ஆற்றுத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நேற்று நடந்தது.

இதற்காக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து உண்ணாமலை சமேத அருணாசலேஸ்வரர் அதிகாலையிலேயே கலசபாக்கம் செய்யாற்றுக்கு புறப்பட்டார்.

செய்யாற்றின் அருகிலுள்ள தென்பள்ளிப்பட்டு மற்றும் மேட்டுப்பாளையம் கிராம மக்கள் அருணாசலேஸ்வரருக்கு வரவேற்பு அளித்து, ஆற்றுத் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றனர்.

அதேபோன்று செய்யாற்றின் வடகரையில் உள்ள கலசபாக்கம் திரிபுரசுந்தரி உடனாகிய திருமாமுடீஸ்வரரை பக்தர்கள் மேளதாளத்துடன் செய்யாற்றுக்கு அழைத்து வந்தனர்.

இரண்டு சாமிகளும் செய்யாறில் எதிர் எதிரே இறங்கி ஆனந்த நடனமாடியவாறு ஆற்றில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

துரிஞ்சாபுரம் ஒன்றியம் தனகோட்டிபுரம் கிராமத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 110 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனகோட்டிபுரம் கிராம விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து நெல் பயிரிட்டு வருகின்றனர்.

செய்யாற்றில் நடக்கும் தீர்த்தவாரிக்கு சென்ற அருணாசலேஸ்வரர் தனக்கோட்டி புரத்தில்உள்ள நிலத்துக்கு சென்றார். அங்கு நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை மாலையாக கட்டி சாமிக்கு அணிவித்தனர். பெண்கள் பொங்கல்வைத்து வழிபட்டனர்.
Tags:    

Similar News