ஆன்மிகம்
நடராஜர்

கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ் பெற அனுஷ்டிக்க வேண்டிய விரதம்

Published On 2020-12-23 05:48 GMT   |   Update On 2020-12-23 05:48 GMT
ஆடிய பாதத்தோடு நீடிய கருணைகொண்டு வாழ்வை வளப்படுத்துபவர் நடராஜப் பெருமான். கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ் பெறவேண்டுமென்று விரும்பும் மாந்தர்கள், விரதம் இருந்து நடராஜப் பெருமானை முழுமையாக வழிபடவேண்டும்.
நடராஜப் பெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும், இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும். அதில் வருடத் தொடக்கத்தில் வரும் ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தன்று நடராஜர் அபிஷேகம் நடைபெறும். இந்த மாதத்தில் ஆடல் அரசனைப் பாடிப் பணிந்து வழிபட்டால் கோடிகோடியாய் நன்மை கிடைக்கும். அன்று சிவபுராணம் பாடி இறைவனைத் தரிசித்தால் சிந்தையில் நினைத்த காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். வந்த துயரங்கள் வாசலோடு நின்றுவிடும்.

எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல் இறைவழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு நம்பிக்கை மட்டுமே நமக்குத் தேவை. அந்த நம்பிக்கையை முழுமையாக நடராஜர் மீது வைக்க வேண்டிய மாதம் ஆனி மாதமாகும். நடராஜரை ‘தில்லை கூத்தன்’ என்றும், ‘ஆடலரசன்’ என்றும், ‘கூத்தபிரான்’ என்றும் அழைப்பது வழக்கம். ஆடிய பாதத்தோடு நீடிய கருணைகொண்டு வாழ்வை வளப்படுத்துபவர் நடராஜப் பெருமான். கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ் பெறவேண்டுமென்று விரும்பும் மாந்தர்கள், நடராஜப் பெருமானை முழுமையாக வழிபடவேண்டும்.

சிவாலயங்களில் சிவகாமி அம்மன் உடனாய நடராஜப் பெருமான், சிவன் சன்னிதிக்கு அருகிலேயே இருப்பார். முயலகனை வதம் செய்த கோலத்தோடு கால் தூக்கி ஆடும் அந்த இனிய காட்சியை நாம் கண்டு மகிழவேண்டும். மிதுனத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆனி மாதத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

மிதுன ராசி, நவக்கிரகங்களில் புதனுக்கு சொந்த வீடாகும். புதன் கல்விக்குரிய கிரகமாக கருதப்படுகிறார். எனவே, கல்வி கேள்விகளில் தேர்ச்சிபெற, மாணவர்கள் இம்மாதத்தில் நடைபெறும் இதுபோன்ற விழாக்களில் கலந்துகொண்டு வழிபட்டால் படிப்பில் முதன்மை பெற வழிவகுக்கும். மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிபாடு ஒன்றுதான் வழிவகுக்கும்.

ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரிசனத்தை கண்டு களிப்பவர்கள், பகல் முழுவதும் விரதம்இருந்து சிவனுக்குரிய அபிஷேக ஆராதனைகளைக் கண்டுகளிப்பதோடு, நடராஜப் பெரு மானையும் தரிசித்து அவர் சன்னிதியில் சிவபுராணம் பாட வேண்டும்.

‘திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பது பழமொழி. அந்த அடிப்படையில் நாம் இறைவன் சன்னிதியில் திருவாசகம் பாடினால், அவர் தரிசனம் நமக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் கரிசனத்தோடு வந்து காட்சிகொடுத்து அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை. வாழ்வாங்குவாழ, வாழ்வை வெல்ல,வெற்றிகளைக் குவிக்க சிவன் சேவடியைப் போற்றி வணங்கவேண்டும்.

‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்.
Tags:    

Similar News