செய்திகள்
தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் தலமரக்கன்று நடப்பட்டு வருகிறது.

அனைத்து கோவில்களிலும் 1 லட்சம் தலமரக்கன்று நடும் பணி தீவிரம்- இந்துசமய அறநிலையத்துறை தகவல்

Published On 2021-09-22 09:44 GMT   |   Update On 2021-09-22 10:31 GMT
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள மூங்கில் மரத்தை வணங்கினால் இசை ஞானம் வளரும், மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் உள்ள மாமரத்தை வணங்கினால் வெற்றி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
சென்னை:

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 7-ந்தேதியன்று சென்னை, நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ‘கலைஞர்’ தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கும் முகமாக நாகலிங்க தலமரக்கன்றை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் சிறப்பாக விரைந்து செயல்படுத்தி வருகிறது. திருக்கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை மூன்று மாதக் காலத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருச்சி, சிவகங்கை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு திருக்கோவில்களில் அந்தந்த தலமரங்களான மாமரம், புன்னை, வில்வம், செண்பகம், மருதம், நாவல், சந்தனம், மகாக்கனி, இலுப்பை கொய்யா, மகிழம் போன்ற மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கடம்ப மரத்தை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள மூங்கில் மரத்தை வணங்கினால் இசை ஞானம் வளரும், மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் உள்ள மாமரத்தை வணங்கினால் வெற்றி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

இத்தகு தலமரங்களை மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், மேலப்பரங்கிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜ பெருமாள் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளி அம்மன் திருக்கோவில், திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் கோவில், பாபநாசம் சுவாமி திருக்கோவில், அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி திருக்கோவில் உட்பட பல்வேறு திருக்கோவில்களில் தலமரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News