செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட ரேவதியின் உறவினர்கள் - உள்படம் ரேவதி

நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை திடீர் பலி

Published On 2020-01-11 14:27 GMT   |   Update On 2020-01-11 14:27 GMT
நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை பலியான சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:

நாமக்கல் தூசூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜனகர், விவசாயி. இவரது மனைவி ரேவதி (வயது 32). இவர் தனியார் பளளியில் ஆசிரியையாக பணியாற்றினார். ஏற்கனவே இவர்களுக்கு கனிஷ்கர் என்ற ஆண் குழந்தை உள்ளது.

தற்போது கர்ப்பிணியாக இருந்த ரேவதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று பிற்பகலில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது ரத்தப்போக்கு அதிகமாக அவர் திடீரென்று இறந்துவிட்டார்.

இதனால் ரேவதியின் உறவினர்கள் இன்று நாமக்கல் அரசு மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினர். இந்த சம்பவம் குறித்து ரேவதியின் உறவினர்கள் கூறியதாவது:-

ரேவதிக்கு குழந்தை பிறந்த உடனேயே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதிக அளவில் ரத்தப்போக்கு இருந்தது. அதனால் ரேவதிக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. டாக்டர்கள் நீண்ட நேரமாக வரவில்லை. இதனால் நர்சுகளே சிகிச்சை அளித்தனர். உரிய நேரத்தில் டாக்டர்கள் வந்திருந்தால் ரேவதியின் உயிரை காப்பற்றி இருக்கலாம்.

ரேவதி உடலை சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. நாமக்கல் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்யவேண்டும். அரசு மருத்துவர்களுடன் நாங்கள் குறிப்பிடும் மருத்துவரையும் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க வேண்டும். பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்க வேண்டும்.

பிரேத பரிசோதனையில் தவறு கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரேவதியின் உறவினர்களுடன் நாமக்கல் தாசில்தார் பச்சமுத்து, இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News