செய்திகள்
பலியான சிறுமி சைலத்மீரா

விழுப்புரம் அருகே தாய் கண்முன் சிறுமி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

Published On 2021-11-05 08:24 GMT   |   Update On 2021-11-05 08:24 GMT
விழுப்புரம் அருகே ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட சிறுமியின் உடலை 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சித்தலிங்க மடம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்ப ராஜ் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மகள் சைலத்மீரா (10). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று சைலத்மீரா மற்றும் அவரது குடும்பத்தினர் துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஏனாதிமங்கலம் கிராமத்திற்கு சென்றனர். அதன்பின்னர் சைலத்மீரா, தாய் மகாலட்சுமி இருவரும் தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக தென்பெண்ணை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சைலத்மீரா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ச்சி அடைந்த தாய் மகாலட்சுமி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆனால் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை.

இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் ஆற்றில் சைலத்மீராவை தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

தொடர்ந்து திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர் ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் விழுப்புரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சைலத்மீராவின் உடல் மீட்கப்பட்டது.

இறந்த சைலத்மீராவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து திருவெண்ணைநல்லூர் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்நிலையில் தாய் கண்முன் மகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




Tags:    

Similar News