செய்திகள்
சில்வர் தட்டுகளுக்கு நடுவே வைக்கப்பட்டு இருந்த வெளிநாட்டு பணத்தை படத்தில் காணலாம்.

சில்வர் தட்டுகளுக்குள் மறைத்து ரூ.38½ லட்சம் வெளிநாட்டு பணம் கடத்த முயற்சி

Published On 2020-08-21 09:19 GMT   |   Update On 2020-08-21 09:19 GMT
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சில்வர் தட்டுகளுக்கு இடையில் மறைத்து ரூ.38½ லட்சம் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக ஒருவரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய கூரியரில் பெரும் அளவில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூரியர் பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சில்வர் தம்ளர்கள், தட்டுகள் போன்ற பொருட்கள் இருப்பதாக ஒரு பார்சல் இருந்தது. அவற்றின் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்து பார்த்தனர்.

அந்த பார்சலில் இருந்த சில்வர் தட்டுகள் வழக்கத்துக்கு மாறாக அதிக எடை கொண்டதாக இருந்தது. பரிசோதனை செய்ததில் 2 தட்டுகள் ஒன்றன் மீது ஒன்றாக இணைக்கப்பட்டு இருந்தது. சந்தேகத்தின்பேரில் 2 தட்டுகளையும் பிரித்து பார்த்தபோது, தட்டுகளுக்கு இடையே இங்கிலாந்து நாட்டு பவுண்ட் கரன்சிகளை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர்.

ரூ.38 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள 40 ஆயிரம் பவுண்டு கரன்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கூரியர் பார்சல் அனுப்பியதாக சென்னையை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News