செய்திகள்
விராட் கோலி

நான் உரிமையாளராக இருந்தால் கோலியை கேப்டனாக நீடிக்க சொல்லிருப்பேன் - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கருத்து

Published On 2021-10-13 06:59 GMT   |   Update On 2021-10-13 06:59 GMT
பெங்களூர் அணியில் தற்போது உள்ள வீரர்களில் விராட் கோலி, மேக்ஸ்வெல், படிக்கல் ஆகிய 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 வடிவிலான (டெஸ்ட், ஒரு நாள் ஆட்டம் மற்றும் 20 ஓவர்) போட்டிகளுக்கும் கேப்டனாக விராட் கோலி இருக்கிறார்.

கேப்டன் பதவியால் தனது பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதாக கோலி கருதியுள்ளார். இதைத் தொடர்ந்து 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் ஏற்கனவே அறிவித்தார்.

அதே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட் டியில் தொடர்ந்து அவர் கேப்டனாக இருப்பார். 20 ஓவர் அணியில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் அறிவித்திருந்தார்.

விராட் கோலி ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வருகிறார். 2013-ம் ஆண்டு முதல் அந்த அணிக்கு கேப்டனாக இருக்கும் அவர் ஒருமுறை கூட ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுக்கவில்லை.

இதற்கிடையே இந்த ஐ.பி.எல். போட்டியோடு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தார். கோப்பையுடன் வெளியேற இருந்த அவரது கனவு தகர்ந்தது. எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்றதால் ஐ.பி.எல். கோப்பையை விராட் கோலியால் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பெங்களூர் அணிக்காக தான் கடைசிவரை விளையாடுவேன் என்று அவர் கொல்கத்தாவுடன் மோதிய போட்டிக்கு பிறகு தெரிவித்தார்.

இந்த நிலையில் பெங்களூர் அணியின் உரிமையாளராக நான் இருந்திருந்தால் விராட் கோலியை கேப்டன் பதவியில் நீடிக்க சொல்லி இருப்பேன் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பேட்ஸ்மேன் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


நான் மட்டும் பெங்களூர் அணியின் உரிமையாளராக இருந்திருந்தால் கோலியிடம் தனிப்பட்ட முறையில் கேப்டன் பொறுப்பை தொடருமாறு கேட்டிருப்பேன். ஏனென்றால் ஒரு வீரராகவும், ஒரு அணியின் தலைவராகவும் அவரை இருவேறு நபராக நான் பார்க்கிறேன்.

மிகவும் திறமை வாய்ந்த, வயதில் இளையவரான அவர் எப்படியும் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார். இத்தகைய சூழலில் அவர் வேறொரு வீரரின் கீழ் ஆடுவதை நான் பார்க்க விரும்பவில்லை.

கோலி கேப்டனாக இல்லாத பெங்களூர் அணி எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. அதனால் தான் சொல்கிறேன் நான் உரிமையாளராக இருந்தால் மீண்டும் ஒருமுறை முற்றிலும் மாறுபட்ட அணியை உங்களது (கோலி) தலைமையில் அமைத்து விளையாடுவோம் என்று சொல்வேன்.

பெங்களூர் அணியில் தற்போது உள்ள வீரர்களில் விராட் கோலி, மேக்ஸ்வெல், படிக்கல் ஆகிய 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு லாரா கூறியுள்ளார்.

Tags:    

Similar News