செய்திகள்
தூத்துக்குடியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
தூத்துக்குடி சின்னக்கோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
தூத்துக்குடி:
ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். அதன் நிறைவாக ஏசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி சாம்பல் புதன் தினத்தன்று தொடங்கியது. ஏசு உயிர் துறந்த புனித வெள்ளி கடந்த 2-ந் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாப்பட்டது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
தூத்துக்குடி சின்னக்கோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர்.
ஏசு உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இதே போன்று தூய பனிமய மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தேவாலயங்கள் மூடப்பட்டதால் ஈஸ்டர் வழிபாடுகள் நடைபெறவில்லை.
இந்த ஆண்டு ஊரடங்கு தளர்வு காரணமாக அனைத்து தேவாலயங்ளிலும் ஈஸ்டர் வழிபாடுகள் நடந்தன. இதனால் கிறிஸ்தவர்கள் அதிகளவில் பங்கேற்றனர்.