ஆன்மிகம்
பொதுமக்கள் தடையை மீறி புனித நீராடி திதி கொடுத்தனர்

வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் தடையை மீறி முன்னோர்களுக்கு திதி கொடுத்த பொதுமக்கள்

Published On 2020-09-17 08:47 GMT   |   Update On 2020-09-17 08:47 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற்கரை, கோடியக்கரை சித்தர் கட்டம் ஆகிய கடற்கரை பகுதிகளில் ஆங்காங்கே பொதுமக்கள் தடையை மீறி புனித நீராடி திதி கொடுத்தனர்.
அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள். தை, ஆடி, புரட்டாசி மாதம் என்ற 3 அமாவாசைகள் மகாளயம் என்ற முக்கியத்துவம் வாய்ந்தது.

இன்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை என்பதால் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக நீர்நிலைகளில் கூட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற்கரை, கோடியக்கரை சித்தர் கட்டம் ஆகிய கடற்கரை பகுதிகளில் ஆங்காங்கே பொதுமக்கள் தடையை மீறி புனித நீராடி திதி கொடுத்தனர். இருப்பினும் வேதாரண்யஸ்வரர் கோவில் பூட்டப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதே போல் மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் ரி‌ஷப தீர்த்தத்தில் மகாளய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தடையை மீறி ஏராளமானோர் திதி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம்தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டதால் இன்று புஷ்ய மண்டப படித்துறையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. நகரை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

திருவையாறு சரகத்தில் உள்ள 6 ஆற்று வழிகளும் மூடப்பட்டது. திதி கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் காவிரி படித்துறை வெறிச்சோடி காணப்பட்டது.

இதேப்போல் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாமக குளத்திலும் திதி கொடுக்க அனுமதிக்க வில்லை.
Tags:    

Similar News