ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா இன்று நடக்கிறது

Published On 2021-03-01 07:37 GMT   |   Update On 2021-03-01 07:37 GMT
புகழ் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 8-வது ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் 8-வது ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறப்பு, நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், அம்மனுக்கு அபிஷேகம், ஸ்ரீபலிபூஜை, கலசபூஜை, சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வருதல், அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலில் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் அம்மனை தரிசிக்க கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News