செய்திகள்
கோவில்பட்டி நகரசபை குப்பை கிடங்கில் திடீர் தீ
கோவில்பட்டி நகரசபை குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பராபுரம் கிராமத்தில், கோவில்பட்டி நகரசபைக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு கோவில்பட்டி நகரில் சேரும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் தனியாக குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இங்கு நேற்று மாலையில் திடீரென தீப்பிடித்தது.
காற்று வேகமாக அடித்ததால் தீ மளமளவென்று பரவியது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் ஏற்பட்டு கோவில்பட்டி- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் ராஜாராமன், சுகாதார அதிகாரி இளங்கோ, சுகாதார ஆய்வாளர் சுரேஷ் மற்றும் நகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் தங்கள் வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.