செய்திகள்
திருப்பூரில் பரிதாபம் டெம்போ மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்றுகொண்டிருந்த டெம்போ திடீரென நின்றது.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த பல்லடம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவர் வீட்டின் அருகிலேயே செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு செல்போன் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் திருப்பூர் வந்தார்.
பொருள்களை வாங்கிக் கொண்டு பல்லடம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்றுகொண்டிருந்த டெம்போ திடீரென நின்றது.
இதனை எதிர்பார்க்காத செந்தில்குமார் அந்த டெம்போவின் பின்புறத்தில் வேகமாக மோதினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.