செய்திகள்
கேஎஸ் அழகிரி

கவர்னர் 4 வாரம் அவகாசம் கேட்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயல்- கே.எஸ்.அழகிரி கண்டனம்

Published On 2020-10-23 08:28 GMT   |   Update On 2020-10-23 08:28 GMT
7.5 சதவீத ஒதுக்கீடு மசோதா ஒப்புதல் வழங்க கவர்னர் 4 வாரம் அவகாசம் கேட்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயல் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டபேரவையில் அனைத்து கட்சிகளும் இணைந்து கடந்த மாதம் 15-ந்தேதி ஏகமனதாக நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பிய மசோதாவிற்கு இன்று வரை ஒப்புதல் அளிக்க அவர் முன்வரவில்லை. இது குறித்து எதிர்க்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு மேலும் 3 முதல் 4 வாரங்கள் அவகாசம் தேவைப்படும் என்று ஆளுநர் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.

அரசமைப்பு சட்டப்படி ஆளுநரின் அதிகாரம் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் அறிவுரைப்படி ஆளுநர் பணியாற்ற வேண்டும். அமைச்சர்கள் குழு எடுக்கும் முடிவுகளையும் சட்டம் இயற்றப்படுவதற்கான மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருக்கிறது. நடைமுறையில் அமைச்சர்கள் குழுதான் மாநில நிர்வாகத்தை நடத்துகிறது.

அமைச்சர்கள் குழுவின் அறிவுரைக்கு எதிராக ஆளுநர் செயல்பட முடியாது. ஆளுநருக்குள்ள விருப்பு உரிமையின் அளவு மிக மிக குறைவாகும். அரசின் கொள்கையை வகுப்பதும், நடைமுறையில் செயல்வடிவம் கொடுப்பதும் அமைச்சரவை குழுதான்.

பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால்தான் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவேன் என்று தமிழக ஆளுநர் கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்து இருக்கின்றன. இது சமூக நீதியை குழி தோண்டி புதைக்கிற செயலாகும்.

எனவே, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிற வகையில் தமிழக சட்டபேரவையில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவிற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். காலதாமத்தை ஏற்படுத்துவாரேயானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். ஆளுநரை தட்டிக்கேட்க துணிவில்லாமல் செயல்படும் அரசையும் வன்மையாக கண்டிக்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News