செய்திகள்
புரட்டாசி விரதம் முடிந்ததால் பெரிய மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டத்தை காணலாம்

மார்க்கெட், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்- போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்

Published On 2020-10-19 03:46 GMT   |   Update On 2020-10-19 03:46 GMT
புரட்டாசி விரதம் முடிவடைந்த நிலையில் நேற்று மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதம் என்பதால் கடந்த ஒரு மாதமாக இந்துக்கள் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிட்டு வந்தனர். இதனால் இறைச்சி கடைகளில் கூட்டம் சற்று குறைவாக இருந்தது.

கடந்த 16-ந் தேதியுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது. அத்துடன் பலர் தங்கள் விரதத்தை முடித்துக்கொண்டனர். புரட்டாசி மாதம் முடிந்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று இறைச்சிகள், மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக நின்று இறைச்சி வாங்கிச் சென்றனர்.

அப்போது அந்த வழியாக சென்ற போலீசார், சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் கூடி நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஒலிபெருக்கி மூலம் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். புதுவையில் நேற்று ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.750-க்கும், கோழிக்கறி ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

உப்பளம் சாலையில் இருந்து மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் பாதை, சிமெண்டு சாலை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று காலை பெண்கள் தரையில் கடை விரித்து மீன் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டனர். பெரியமார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களிலும் பெண்கள் மீன் வியாபாரம் செய்தனர்.

நேற்று காலை லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதை பொருட்படுத்தாமலும், கொரோனா பற்றி கவலைப்படாமலும் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டும் மீன்களை வாங்கிச்சென்றனர். வழக்கத்தை விட நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதன் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News