செய்திகள்
அரியலூர் அருகே பள்ளி பஸ்-லாரி மோதல்: 5 மாணவர்கள் காயம்
அரியலூர் அருகே இன்று காலை பள்ளி பஸ்-லாரி மோதிய விபத்தில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர்:
பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் அரியலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். அவர்கள் தினமும் பள்ளி பஸ்சில் பெரம்பலூருக்கு செல்வது வழக்கம். அதுபோல் இன்று காலை அரியலூர் பகுதியை சேர்ந்த மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி பஸ் பெரம்பலூரை நோக்கி சென்றது.
அரியலூர்-பெரம்பலூர் இடையே செந்துறை புற வழிச்சாலை பகுதியில் செல்லும் போது, பஸ்சின் கிளீனர் , ஊதுபத்திகொளுத்தி டிரைவர் அருகே உள்ள பகுதியில் வைக்க முயன்றார். அதனை டிரைவர் பார்த்தவாறு பஸ்சை ஓட்டியதில், திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் மோதியது.
இதில் பஸ்சின் முன்பகுதியில் இருந்த மாணவர்களான அரியலூர் அம்மாக்குளத்தை சேர்ந்த இஸ்ரோ(வயது 14), மாலதி (11), அய்யப்பன்(11),கீழப்பளூரை சேர்ந்த நித்யா(17) உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பள்ளி பஸ் டிரைவர் மற்றும் கிளீனரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.