காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
புதுச்சேரி:
புதுவையில் 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முதல்-அமைச்சராக ரங்கசாமி இருந்த போது கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் அருகே ரூ.14 கோடியில் 3.75 ஏக்கரில் காமராஜருக்கு மணி மண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து 2009-ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக இந்தப்பணி நிறுத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு ரூ.24 கோடி ஹட்கோ கடனுதவியில் மீண்டும் கட்டுமானப்பணி தொடங்கியது.
அப்போது முதல்-அமைச்சராக இருந்த ரங்கசாமி 2-வது முறையாக காமராஜர் மணி மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த மணி மண்டபத்தில், ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம், உலகத்தரம் வாய்ந்த நூலகம், 130 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், 4 ஆயிரத்து 417 சதுர அடி தரைத்தளம், காமராஜர் சிலை, அவரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சிக்கூடம் அமைக்கப்பட்டன.
ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணி மண்டபத்தை 14 ஆண்டுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
இதேபோல ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் உலகத்தரம் வாய்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில்சார் தொழில்நுட்ப மையம் புதுவை தொழில்நுட்ப மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதி நவீன எந்திரங்களுடன் கூடிய ரூ.122 கோடி மதிப்பிலான தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.