ஆன்மிகம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்

Published On 2019-06-15 05:56 GMT   |   Update On 2019-06-15 05:56 GMT
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோவில், நவதிருப்பதி ஸ்தலங்களில் 9-வது கோவிலாகும். இந்த கோவிலில் நம்மாழ்வார் அவதாரத்தை குறிக்கும் வகையில் திருவைகாசி திருஅவதார திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலையில் தினமும் நம்மாழ்வார் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 10-ந் தேதி காலையில் நம்மாழ்வாருக்கு மங்களா சாசனம் நிகழ்ச்சியும், இரவு பெருமாள்கள் கருட சேவையும் நடந்தது.

14-ந் தேதியான நேற்று வைகாசி திருவிழா தேரோட் டம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை 7 மணிக்கு நம்மாழ்வார் தேரில் எழுந்தருளினார். தேர் காலை 9.30 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மேலரதவீதியில் தொடங்கிய தேரோட் டம் 4 ரத வீதிகள் வழியாக சென்று, 11 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. அதனை தொடர்ந்து மாலையில் மங்களாசாசன நிகழ்ச்சியும், இரவு வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி விசுவநாத், கோவில் தக்கார் கார்த்திக், சீனிவாசா அறக்கட்டளை ஆலோசகர் கசல்காத்த பெருமாள், முருகன், வ.உ.சி. இளைஞர் பேரவை தலைவர் கோமதிநாயகம், அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News