செய்திகள்
செங்குன்றம் அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளை
செங்குன்றம் அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் ரங்கா கார்டன் எம்.ஆர்.எச். சாலையை சேர்ந்தவர் மணிஷ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 8-ந் தேதி அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றார்.
இன்று காலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது மர்ம ஆசாமிகள் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகை விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் அரைகிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மணிஷ் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வசந்தன் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.