செய்திகள்
திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்த காட்சி.

திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாய பணிகள் தீவிரம்

Published On 2021-08-04 09:47 GMT   |   Update On 2021-08-04 09:47 GMT
கடந்த மாதம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள் மூலமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
உடுமலை:

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதற்காக பாசன நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 

பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீரும் மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் உருவாகும் காட்டாறுகள், பாலாறு மற்றும் திருமூர்த்திமலை ஆறு ஆகியவற்றின் மூலம் பெறப்படுகின்ற தண்ணீரும் திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களாகும். அதை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குமரலிங்கம், பூலாங்கிணர் மற்றும் குடிமங்கலம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள் மூலமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் அணைகளின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால் பி.ஏ.பி. திட்டத்தின் உயிர்நாடியான திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து ஏற்படவில்லை. 

அதைத்தொடர்ந்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. இதையடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதற்குண்டான கருத்துருவை அதிகாரிகள் தயாரித்து அரசுக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சூழலில் திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டலம் மற்றும் தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவைத்தார். 

அதைத்தொடர்ந்து மதகுகள் வழியாக பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இதையடுத்து அணைப்பகுதியில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர். தண்ணீர் திறந்துவிடப்பட்டதையடுத்து உடுமலை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News