செய்திகள்
முக ஸ்டாலின்

திராவிட இயக்க தலைவர் ராசகிரி தங்கராசு மரணம்- மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2021-10-06 09:12 GMT   |   Update On 2021-10-06 09:12 GMT
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் காலந்தொட்டு தற்போது வரை திராவிடர் கழகத்தின் முக்கியத் தூண்களுள் ஒருவராக விளங்கியவர் ராசகிரி கோ. தங்கராசு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

திராவிடர் கழகத்தின் மேனாள் செயலவைத் தலைவரும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன நிர்வாகக் குழுவின் துணைத்தலைவருமான பெரியாரியப் பெருந்தொண்டர் அய்யா ராசகிரி கோ. தங்கராசு நேற்று இரவு மறைந்தார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன்.

அவர், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் காலந்தொட்டு தற்போது வரை திராவிடர் கழகத்தின் முக்கியத் தூண்களுள் ஒருவராக விளங்கியவர். சட்ட எரிப்புப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றுச் சிறை சென்ற கொள்கைக் குன்றாகத் திகழ்ந்தவர்.

பெருவாழ்வு வாழ்ந்து பெரியாரியத் தொண்டாற்றிய அவர் மூப்பின் காரணமாக நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டார்.

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களுள் ஒருவரான அய்யா ராசகிரி கோ. தங்கராசுவை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினர் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News