செய்திகள்
டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பாட்டில்கள் கொட்ட கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக அப்பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையின் முன்புறம் உள்ள ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் போன்ற கழிவு பொருட்களை சிலர் கொட்டி வந்தனர். மேலும் குப்பைகளுக்கு தீ வைப்பதால் அங்கு புகை மண்டலம் எழுந்து சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக தகவல் அரசு அதிகாரிகள், கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், ஆகியோர் தூய்மைப் பணியாளர்களை அழைத்து அப்பகுதியை உடனடியாக சுத்தம் செய்ய உத்தரவிட்டனர்.
இதனையடுத்து அங்கு கொட்டப்பட்டிருந்த கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டது. இனி இதுபோல் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பாட்டில்கள் கொட்ட கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்திய ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் டாஸ்மாக் கடையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.