செய்திகள்
சோனியா

கட்டாய மதம்மாறி திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் தொடரும் கொடூரம்

Published On 2020-12-06 12:25 GMT   |   Update On 2020-12-06 12:25 GMT
பாகிஸ்தானில் கட்டாய மதம்மாறி திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்து, கிருஸ்தவம், சீக்கியம் போன்ற சிறுபான்மை மதத்தை சேர்ந்த இளம்பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு பெரும்பான்மை இஸ்லாமிய மதத்தினரால் கட்டாய திருமணம் செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 

இந்த கட்டாய மதமாற்றம், திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் இளம்பெண்கள் கடத்தப்பட்டும், கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அதுபோன்ற மேலும் ஒரு சம்பவம் பாகிஸ்தானில் நடைபெற்றுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ராவல்பெண்டி நகரை சேர்ந்த தம்பதிகள் ரக்ஹா மசிஜ் - தெரசா. கிருஸ்தவ மதத்தை சேர்ந்த இவர்களுக்கு மொத்தம் 6 மகள்கள் உள்ளனர். அவர்களில் சோனியா பிபி (24) மூத்த மகள். 

இதற்கிடையில், சோனியாயை அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞரான சஜீத் என்ற கடந்த 5 மாதங்களாக பின் தொடர்து தொல்லைகொடுத்துள்ளான். 

மேலும், சோனியாவை மதமாற்றம் செய்து தனக்கு திருமணம் செய்து தரும்படி சோனியாவின் பெற்றோரிடம் சஜீத் தனது பெற்றோருடன் சென்று பெண் கேட்டுள்ளான். 

ஆனால், சஜீத்தை திருமணம் செய்துகொள்ள தனக்கு சம்மதம் இல்லை என சோனியா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், தனது மகளை சஜீத்திற்கு திருமணம் செய்துகொடுக்க சோனியாவின் பெற்றோருக்கும் விருப்பம் இல்லாததால் திருமணத்திற்கு அவர்கள் சம்பதம் தெரிவிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த சஜீத் தனது நண்பன் ஃபைசனுடன் இணைந்து சோனியாவை கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துவந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 30-ம் தேதி காலை சோனியாவின் வீட்டிற்கு வந்த சஜீத்தின் நண்பன் ஃபைசன் அவரை அழைத்துக்கொண்டு ராவல்பெண்டியில் உள்ள ஃபசையா காலணி பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளான். அப்போது அங்குவந்த துப்பாக்கியுடன் வந்த சஜீத் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சோனியாவின் தலையில் பலமுறை சுட்டுள்ளான்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் சோனியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சஜீத்தின் நண்பன் ஃபைசனை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சஜீத்தை தீவிரமாக தேடிவருகின்றனர்.

மாற்றுமத நபரை கட்டாய மதம்மாறி திருமணம் செய மறுப்பு தெரிவித்த சோனியா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News