செய்திகள்
தாமிரபரணி ஆறு, கடலில் கலக்கும் பகுதியான முக்காணி பாலத்தில் கலெக்டர் ஆய்வு
தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கடலில் கலக்கும் இடமான ஆத்தூர் முக்காணி ஆற்றுப் பாலத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு நடத்தினார்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அணைகளில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதாலும், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தாமிரபரணி ஆறு இறுதியாக கடலில் கலக்கும் இடமான ஆத்தூர் பகுதியில் உள்ள முக்காணி ஆற்று பாலத்தில் அமலை செடிகள் தண்ணீர் செல்லும் பாதைகளை அடைத்துக் கொண்டு இருந்தன.
தகவல் அறிந்த கலெக்டர் செந்தில்ராஜ் அந்த பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார். அவர் முன்னிலையில், ஆத்தூர் நகர பஞ்சாயத்து மூலம் பாலத்தின் கீழ் பகுதியில் அடைத்துக் கொண்டிருந்த அமலைச் செடிகளை அகற்றும் பணி நடந்தது. முழுமையாக அமலைசெடிகள் அகற்றப்பட்ட பின்னர், அங்கிருந்து தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடமான புன்னக்காயல் முகத்துவாரத்தையும் அவர் பார்வையிட்டார்.
இந்த பகுதிகளில் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட அவர் உத்தரவிட்டார்.
அவருடன் உதவி கலெக்டரகள் சிம்ரன்ஜீத்சிங், தனப்பிரியா, தாசில்தார்கள் இசக்கிராஜ், கோபாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை தொழில்நுட்ப துறை உதவியாளர் பண்டாரம், ஆத்தூர் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரங்கசாமி ஆகியோர் சென்றனர்.