செய்திகள்
கொலை

வேளாங்கண்ணி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

Published On 2021-01-27 12:12 GMT   |   Update On 2021-01-27 12:12 GMT
வேளாங்கண்ணி அருகே வாலிபரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொன்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி வடக்கு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் இளையராஜா(வயது 33). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் ஆட்டுக்கறி வெட்டும் தொழில் செய்து வந்தார்.

திருப்பூண்டியில் ஓட்டல் தொடங்க போவதாக கூறி தனது தந்தை சுப்பிரமணியனிடம் இளையராஜா பணம் கேட்டுள்ளார். அவர் தன்னிடம், பணம் இல்லாததால் வீட்டில் இருந்த நகையை கொடுத்து உள்ளார்.

இந்த நிலையில் இளையராஜா நேற்று முன்தினம் வெளியில் செல்வதாக வீட்டில் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். விழுந்தமாவடி கன்னிதோப்பு அய்யனார் கோவில் அருகே வந்தபோது மர்ம நபர்கள், இளையராஜா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

தனது மோட்டார் சைக்கிளை சிலர் வழிமறித்தவுடன் செய்வதறியாது திகைத்த இளையராஜா சுதாரிப்பதற்குள் அந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் இளையராஜாவை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளையராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கொலை செய்தவர்கள் யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News