செய்திகள்
கொரோனா வைரஸ்

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா

Published On 2021-04-05 05:11 GMT   |   Update On 2021-04-05 08:21 GMT
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மீண்டும் கொரோனா தொற்று மாவட்டத்தில் வேகமாக பரவும் அபாயம் உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு மாவட்டத்தில் குறையவில்லை. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக நாள் ஒன்றின் பாதிப்பு மாவட்டத்தில் 30-க்கும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு அதிகரித்து வருவது அனைவரையும் அச்சமடைய செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் கோவை, திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 653-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 42 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 893-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 533 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பலன் இன்றி 227 பேர் பலியாகியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
Tags:    

Similar News