செய்திகள்
கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதை காணலாம்

கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம்- கடலில் குளிக்க சுற்றுலா பயணிகள் அச்சம்

Published On 2021-11-09 09:59 GMT   |   Update On 2021-11-09 09:59 GMT
கன்னியாகுமரி, வாவத்துறை, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் இன்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இடைவிடாமல் பலத்த மழை பெய்துவருகிறது. இந்த மழை நேற்றும்3-வதுநாளாக தொடர்ந்து பெய்தது. மழையின் காரணமாக கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் இருந்தே கருமேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சிஅளித்தது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் மழைமேகத்தை பொருட்படுத்தாமல் சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலையில் இருந்தே கடற்கரைக்கு திரண்டு வந்தனர். ஆனால் மழை காரணமாக இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சி தெரியவில்லை. இதனால் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரைக்கு சூரியன் உதயமாகும் காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்த மழையினால் கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் நடுக்கடலில் இருந்தது பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோ‌ஷமாக வந்து கடற்கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது.

சில நேரங்களில் கிளம்பி வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டு விட்டுச் சென்றன. இந்த ராட்சத அலையை கண்டு கடலில் கால் நனைக்க சென்ற சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்தக் கடல் சீற்றத்தினால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க அச்சம் அடைந்தனர்.

இதேபோல கன்னியாகுமரி, வாவத்துறை, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் இன்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் இந்தகடற்கரை கிராமங்களில் ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோ‌ஷமாக வீசின. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மழையின் காரணமாக கன்னியாகுமரிக்கு ஏற்கனவே வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க வெளியே வர முடியாமல் தாங்கள் தங்கி இருக்கும் லாட்ஜ்களில் உள்ள அறைகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி குற்றாலம் சீசன் போல் “குளுகுளு” என்று மாறிவிட்டது.
Tags:    

Similar News