செய்திகள்
உடுமலை தினசரி சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை
பழநி, மறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதலுக்காக வந்து செல்கின்றனர்.
உடுமலை:
உடுமலை ராஜேந்திரா சாலையில் நகராட்சி தினசரி சந்தை அமைந்துள்ளது. இங்குள்ள காய்கனி கமிஷன் மண்டிகளுக்கு சுற்றுப்பகுதியிலிருந்து நாள்தோறும் தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறிகளை விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
அதேபோல் பழநி, மறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதலுக்காக வந்து செல்கின்றனர். இவ்வாறு பரபரப்பாக இயங்கும் தினசரி சந்தை வாயிலாக தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் நகராட்சி சுகாதாரத்துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில் சிறப்பு மருத்துவ குழுவினர் சந்தைக்கு வந்த விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்தனர். மேலும் தொற்றுப்பரவலை தவிர்க்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது.